Monday, October 10, 2011

அப்பா

'நீ எங்கேயும் சுத்தாம வீட்டுலேயெ இரு. நான் வெளியில ஒரு வேலையா போயிட்டு இப்போ வந்துடுறேன்"

"இல்லப்பா.. நானும் உங்க கூட வருவேன்", அடம் பிடித்தேன்.

"சரி வா, கிளம்பு!", அப்பா ஒருமனதோடு அழைத்தார்.

முதன் முதலா அப்பாவோடு வீட்டைவிட்டு வெளிய வந்தது சந்தோஷமா இருந்தது.

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடினேன்.

"மெதுவா போடா.. இந்த சந்துல நாம எதிர்பாக்காத நேரம் பார்த்து ஏதாவது வண்டி கிண்டி வந்து தொலைக்கும்டா.."

நான் அதைக் கண்டுக்கவே யில்லை.

"அப்பா.. நாம இப்போ எங்க போறோம்?"

"அதுவா.. அய்யா, குடும்பத்தோட குலதெய்வக் கோயில் திருவிழாவுக்கு போயி இன்னையோட ரெண்டு நாளாயிட்டு. இன்னும் யாருமே திரும்பி வரல..அதான் ஊர் எல்லைக்கு போயி பார்த்துட்டு வரலாம்னு"

"திருவிழான்னா என்னப்பா? எப்படிப்பா இருக்கும்? என் நம்பளையெல்லாம் அங்கே கூட்டிட்டு போல"

"திருவிழா அன்னைக்கு ரொம்ப கூட்டமா இருக்கும்டா.. நான் ஒரு முறை போயிருக்கேன்.."

"எப்படிப்பா இருந்துச்சி?"

"அன்னைக்குன்னு பாத்து என் நேரம் சரியில்லை போலிருக்கு.. கூட்டத்துல காணோமோ போயிட்டேன்."

"அய்யய்யோ! அப்புறம் !"

"எப்படியோ வீடத் தேடிக் கண்டுபிடிச்சி மூணு நாள் கழிச்சி வீட்டுக்கு வந்துட்டேன்.. நாமலும் அவுங்களோட போயிட்டா அப்புறம் அய்யாவோட இம்பூட்டு பெரிய வீட்டை யாருடா பாத்துக்குவா? "

பேசிக் கொண்டே நாலு தெரு கடந்து ஊரோட எல்லைக்கே வந்துட்டோம்.

அப்பா ரோட்டோட இரு திசையையும் அடிக்கடி பார்த்து கொண்டிருந்தார்.

"இன்னைக்கும் வர மாட்டாங்க போலிருக்கு", அப்பா ஏக்கத்தோடு புலம்பினார்.

"அப்ப இன்னைக்கும் பக்கத்து வீட்டு அம்மா சமைக்கிறததான் சாப்பிடனுமாப்பா?"

"ஏன்டா, அது உனக்குப் பிடிக்கலையா?"

"இல்லைப்பா.. நம்ப அய்யா வீட்டுது போல வராதுப்பா. பக்கத்து வீட்டு சாப்பாடு எனக்கு அடிக்கடி வயித்த கலக்குதுப்பா"

"சரிடா..இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்க..நாளைக்கு அய்யா வீட்டுக்காரங்க திரும்பி வந்துடுவாங்க"

மறுபடியும் வீட்டை நோக்கி அப்பாவொடு நடக்கலானேன். அப்பா இந்த முறை மௌனமானார்.

"அப்பா , ஏதாச்சும் பேசிக்கிட்டு வாப்பா, நான் வேணா கேள்வி கேட்டுகிட்டே.."

"என்னடா கேட்கப் போற?"

"எவ்வளவு நாளுப்பா நம்ப அய்யா வீட்டுலேயெ இருக்கப் போறோம்?.."

"ஏண்டா , உனக்கு எதாவது பிரச்சினையா?"

"முன்னடி ஒரு பிரச்சினையும் இல்லை.. இப்பத்தான் ஒரு வாரமா.."

"அய்யாவொட பேரப் பசங்க ஏதாச்சும் சண்டை போட்டாங்களா?"

"பெரிய பசங்க இல்லப்பா... அந்த குட்டியா ஒருத்தவன் இருக்கானே..அவந்தாம்பா என்னை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறான், நேத்து நான் அவன் பேச்ச கேட்கலன்னு என்னை கல்லால அடிச்சிட்டாம்பா.. கால்ல சரியான வலி..அப்ப உன்னை எல்லா இடத்துலேயும் தேடிப் பார்த்தேன். நீதான் எங்கயோ போயிட்டே என்கிட்ட சொல்லாமயே.."

"அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதடா.. அவன் ரொம்ப சின்னைப் பையன..அய்யாவொட கடைக்குட்டி பொண்ணோட பையன். அதான் வீட்டுல ரொம்ப செல்லம். லீவுக்கு தாத்தா வீடுக்கு வந்துருக்காக. இன்னும் கொஞ்ச நாலு தான். எல்லாரும் அவுங்க அவுங்க வீட்டுக்கு போயிடுவாங்க..அப்புறம் அய்யா, ஆச்சி, நீ, நான் அவ்வளவு பேரு தான்"

"சரிப்பா.."

பேசிக்கொண்டே தெரு முனைக்கு வந்துட்டோம். வழியில் யாரோ புதுசா ரெண்டு பெயர் கையில பெரிய குச்சி வச்சிகிட்டு இருந்தாங்க.. இவுங்கள நான் இந்த தெருவுல இதுக்கு முன்னடி பார்த்ததே இல்ல..

ரெண்டு அடி நானும் அப்பாவும் எடுத்து வைத்திருப்போம்..

அப்பா உறக்க கத்தினார்..

"ஓடிடு ..ஓடிடு.."

எந்தப் பக்கம் ஓடுறதுன்னே புரியல..அந்த ரெண்டு பேரும் எங்களை நோக்கி கொஞ்சம் வேகமா வந்துகிட்டு இருக்காங்க..

"ஓடு! ஓடு!..கதவைத் தாண்டி ஓடிடு.. நிக்காத!"

அப்பா இதுபோல அலறி அன்னைக்குத்தான் பாக்குறேன்.

எனக்கு கை காலு ஓடல.. அப்பா ஒரே தாவுல ஒரு பெரிய மரத்தட்டி போட்ட கதவை தாண்டிவிட்டார்.

என் பலம் முழுசையும் வைத்து ஒரே தாவல்.முடியல. கீழ வுழுந்திட்டேன்.

அதுக்குள்ள அந்த ரெண்டு பேருல ஒருத்தவன் வீசின குச்சியோட முனையிலருந்த இரும்பு கம்பி வளையம் என்னோட முகத்துல மாட்டி சுருக்கு போட்டது.

இன்னொருத்தவன் கட்டையால அடிக்கிறான்.. வலியில துடிக்கிறேன். கத்தி அப்பாவை கூப்பிடலாம்னு பார்த்தா வாயை தொறக்க முடியல..

என்னை அப்படியே தூக்கி பக்கத்துல இருந்த வண்டியில போட்டாங்க..

அங்கே என்னை மாதிரியே , என்னை விட பெரியவங்க எல்லாம் அழுதுகிட்டே..புலம்பிகிட்டே..

வண்டி அப்படியே நகர்ந்து அடுத்த தெருவுக்கு போகுது..

எட்டிப் பார்க்கிறேன்.

அப்பா மட்டும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவே இல்ல.

No comments:

Post a Comment