Thursday, October 13, 2011

கடிதம்

யாரும் என்னைப் பார்க்காத முடியாத இடமாக அமர்ந்து அந்த காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறதென படிக்க ஆரம்பித்தேன்.

----.----

செல்லம்..

உன்னோட அம்மு எழுதுறேன். என்னை மன்னிச்சிடுடா. இந்த ஜென்மத்துல நம்ம காதல் ஒன்னு சேராதுன்னு நினைக்கிறேன். நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்குடா. உன்னை பார்த்து இன்னையோட சரியா முப்பத்தேழு நாள் ஆகுது. நீ என்ன பண்ற? எப்படி இருக்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்குடா. நீ என்ன பார்க்க ரொம்ப ஆர்வமா இருப்பன்னு எனக்குத் நல்லாத் தெரியும். என்னால உனக்கு ஆரம்பத்திலிருந்து எவ்வளவு வலி, அவமானம். ஆனா அதெல்லாம் தாங்கிட்டு நீ கடைசி வரை நம்மோட காதலை விட்டுக்கொடுக்காம போராடினியே. அதை நெனைச்சா தாண்டா ரொம்ப பெருமையா இருக்கு. ஆனா நம்மோட எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்பா, அம்மா, பெரியப்பா எல்லாரும் அவசர அவசரமா என்னை வேற ஒருத்தன் கிட்ட பிடிச்சி கொடுக்கலாம்னு சுடுதண்ணியை கால்ல ஊத்திகிட்டு நிக்கிறாங்க.வீட்டுல என் கிட்ட இப்பெல்லாம் யாரும் எதை பத்தியும் பேசுறதில்லை. தனி அறையிலே அடைச்சி போட்ருக்காங்க. பாட்டிதான் பொழுது சாஞ்சா என்னோட அறைக்கு தூங்க வருவா. அவகிட்டேயிருந்துதான் எனக்கு மாப்பிள பார்க்கறாங்கன்னு தெரிஞ்சிகிட்டேன். இந்த உலகத்துல நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றது யாருக்கும் பிடிக்கல பார்த்தியா. கேட்டா சாதி வேறன்னு சொல்றாங்க. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா இந்த மண்ணுல பிறக்கவே கூடாதுடா செல்லம். எங்கையாவது ஓரு இடத்துல , இது போல சாதி வெறி புடிச்ச ஜனங்க இல்லாத இடத்துல பிறக்கணுன்டா. அப்படி பிறந்து ஆயுசு முழுசும் காதலித்து, கல்யாணம் பண்ணி, நிறைய குழந்தைய பெத்துக்கணும். ம்ம்.. குழந்தைன்னு சொல்ற போதுதான்

----.----

(எச்சில் முழுங்கி அடுத்த பக்கம் திருப்பி படிக்க ஆரம்பித்தேன்)

----.----

ஞாபகம் வருது. நமக்கு இந்த சோதனையான நேரத்திலும் ஒரு இனிப்பான சேதி. ஆமாம். நான் முழுகாம இருக்கேன். இதைக்கேட்டா நீ எவ்வளவு சந்தோஷப்படுவே. பதினைந்து நாள் முன்னாடிதான், ஒரே அசதியா இருந்து, வாந்தி எடுத்த போது, பாட்டி பார்த்துட்டு, அம்மாகிட்ட வத்தி வச்சிடுச்சி. கோபப்பட்டு அடிச்சாங்க. அப்பா கிட்ட சொல்லப் போறேன்னு போனவங்க கிட்ட, நாந்தான் கால்ல விழுந்து , "அப்படியெல்லாம் சொல்லிடாதிங்கம்மா. அப்புறம் அவர அப்பா உயிரோட வைக்க மாட்டாரும்மா. நான் நீங்க சொல்ற மாதிரி இனி கேட்டுக்கிறேன்" ந்னு காலைப்புடிச்சி அழுதேன். "சரி, இந்த வாரம் சனிக்கிழமை அப்பா சந்தைக்கு கிளம்பின பிறகு ஆஸ்பத்திரிக்கு போய் கருவை கலைச்சிட்டு வந்திடலாம்"னு சொல்லிட்டு போயிட்டாங்க. வயித்துல வளற சிசுவை கலைச்சிட்டு இன்னொருத்தவன் கிட்ட கழுத்த நீட்ட எனக்கு பிடிக்கலடா.. அப்படி செஞ்சா அது நான் உனக்கு செய்ற பாவம். கிடைச்ச ஒரே ஒரு சந்தர்ப்பத்தை சரியா நம்ப ரெண்டு பேரும் பயன் படுத்தி ஊர வீட்டு ஓடிப் போயிருந்தா, இந்த நேரம் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். அதை தவற விட்டுட்டு இப்போ நாம ரெண்டு பேரும் இப்படி அவஸ்தை படுறோம். இப்போ நீ எங்க இருக்க? எங்க அப்பா, பெரியப்பாவால ஏதாவது பிரச்சனை, இடஞ்சல் உனக்கு வந்ததா? நான் இங்கே தனி அறையில சிக்கி தவிக்கிறேன். எனக்கு வெளி உலகத்தில என்ன நடக்குதுன்னே தெரியல. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இந்த நரக வாழ்க்கை வாழனும்? நான் இவுங்களுக்கு சரியான பாடம் காட்டணுமென்றால் அது என் தற்கொலையாத் தான் இருக்கும். அதனாலதான் யாருக்கும் தெரியாம இன்னைக்கு சாயந்திரம் அப்பா அறைக்கு போய், அலமாறியிலிருந்து தூக்க மாத்திரைகள் இருக்கிற டப்பிய எடுத்துட்டு வந்திட்டேன். நாளைக்கு விடியக் காலையில இந்தக் கடிதத்தை பால்காரன் கிட்ட எப்படியாவது சேர்த்துட்டு, மாத்திரைகளை முழுங்களாம்னு

----.----

வேர்த்து விறுவிறுத்து விட்டது. என்னை அறியாமலே நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.

இந்தக் காகிதம் இருந்த குமுதத்தை இரண்டு மூன்று முறை உதறி விட்டேன். அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியான காகிதம் எங்கேன்னு தேட ஆரம்பித்தேன். தேடிக்கொண்டே இருந்தேன். கிடைத்த பாடில்லை. அறையில் போதிய வெளிச்சமில்லாமல் இருள் பரவி கிடந்தது. சுவிட்சை போட்டு பார்த்தேன். நம்ம நேரம், இருக்கிற ஒரே ஒரு நாற்பது வாட் பல்பும் எரியவில்லை.

"மணீ.. டேய் மணீ.." மொதலாளி அவரது அறையிலிருந்து குரல் கொடுத்தது எனக்குக் கேட்டது.

"இதோ வறேன் மொதலாளி" ன்னு அந்த கடிதத்தை மடித்து சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு அவரது அறைக்கு ஓடினேன்.

"வெட்டியா நிக்காதேன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது? உன்கிட்ட என்ன சொன்னேன். ராவுத்தர் கடையில போய், பழைய பேப்பர், புத்தகம் எல்லாம் வாங்கிட்டு வாடா. அவர் இதோட மூணு தடவை போன் பண்ணிட்டாரு.. எல்லாத்தையும் ரெடியா கட்டி வச்சிருக்காராம்"

"வெட்டியா நிக்கிலிங்க மொதலாளி. இதுவரை வந்த பேப்பர், புத்தக கட்டையெல்லாம் பெரிய தராசுல எடைபோட்டு கணக்கு சரியா இருக்கான்னு பாத்துகிட்டு இருந்தேன், லைட் வேற எரிய மாட்டெங்குதுங்க."

"டேய், மணி. உன்னை பத்தி எனக்குத் தெரியாதா.. பேப்பரை எல்லாம் எடை போடுறேன்னு சொல்லிட்டு அங்க போய் பழைய ஆனந்த விகடன், குமுதத்தை எல்லாம் படிச்சிட்டு நிப்ப.. நீ இப்படி படிச்சி படிச்சி வேலையை சரியா கவனிக்காம இருக்கிறதாலதான், நான் அங்க ஒரு பியூஸாப் போன லைட்ட மாட்டி வச்சிருக்கேன். போய் பொழப்ப கவனிடா.. அதான் சோறு போடும்"

"சரிங்க மொதலாளி.." என கனத்த மனதோடு ராவுத்தர் கடைக்கு கிளம்பினேன்.

"அப்பா" கொடுத்த உற்சாகத்தில் "கடிதம்"

முதல் சிறுகதை "அப்பா" எழுதியாகிவிட்டது. முதன்முதலா வானத்தில் ஒரு சிறுவன் வண்ண பட்டத்தை பறக்கவிடுவது போல மகிழ்ச்சி. பரந்த பிரபஞ்ச வெளியில் எனது சிறு பட்டமும் பறக்க ஆரம்பித்திருக்கிறது என்ற உற்சாகம். கருத்து.காம் தளத்தில் அங்கை, ஹரி, வால், விகடகவி, கிருஷ், கோவிந்து, சுஜாதா, இந்தியன், தமிழச்சி, ஜீவா என பல சக இணைய பதிவாளர்கள் அளித்த ஆரோக்யமான விமர்சனங்கள் தொடர்ந்து எழுதலாமே என்ற ஆர்வத்தை அளித்தது. வருடம் 2008. பேருந்து பயணத்தில் ஒரு நாள். திடிரென்று ஒரு சிறுகதைக்கான முடிச்சி உதித்த உடனேயே எழுதி முடித்தேன். தலைப்பு "கடிதம்". வாசித்து விட்டுச் சொல்லுங்கள்.

Monday, October 10, 2011

அப்பா

'நீ எங்கேயும் சுத்தாம வீட்டுலேயெ இரு. நான் வெளியில ஒரு வேலையா போயிட்டு இப்போ வந்துடுறேன்"

"இல்லப்பா.. நானும் உங்க கூட வருவேன்", அடம் பிடித்தேன்.

"சரி வா, கிளம்பு!", அப்பா ஒருமனதோடு அழைத்தார்.

முதன் முதலா அப்பாவோடு வீட்டைவிட்டு வெளிய வந்தது சந்தோஷமா இருந்தது.

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடினேன்.

"மெதுவா போடா.. இந்த சந்துல நாம எதிர்பாக்காத நேரம் பார்த்து ஏதாவது வண்டி கிண்டி வந்து தொலைக்கும்டா.."

நான் அதைக் கண்டுக்கவே யில்லை.

"அப்பா.. நாம இப்போ எங்க போறோம்?"

"அதுவா.. அய்யா, குடும்பத்தோட குலதெய்வக் கோயில் திருவிழாவுக்கு போயி இன்னையோட ரெண்டு நாளாயிட்டு. இன்னும் யாருமே திரும்பி வரல..அதான் ஊர் எல்லைக்கு போயி பார்த்துட்டு வரலாம்னு"

"திருவிழான்னா என்னப்பா? எப்படிப்பா இருக்கும்? என் நம்பளையெல்லாம் அங்கே கூட்டிட்டு போல"

"திருவிழா அன்னைக்கு ரொம்ப கூட்டமா இருக்கும்டா.. நான் ஒரு முறை போயிருக்கேன்.."

"எப்படிப்பா இருந்துச்சி?"

"அன்னைக்குன்னு பாத்து என் நேரம் சரியில்லை போலிருக்கு.. கூட்டத்துல காணோமோ போயிட்டேன்."

"அய்யய்யோ! அப்புறம் !"

"எப்படியோ வீடத் தேடிக் கண்டுபிடிச்சி மூணு நாள் கழிச்சி வீட்டுக்கு வந்துட்டேன்.. நாமலும் அவுங்களோட போயிட்டா அப்புறம் அய்யாவோட இம்பூட்டு பெரிய வீட்டை யாருடா பாத்துக்குவா? "

பேசிக் கொண்டே நாலு தெரு கடந்து ஊரோட எல்லைக்கே வந்துட்டோம்.

அப்பா ரோட்டோட இரு திசையையும் அடிக்கடி பார்த்து கொண்டிருந்தார்.

"இன்னைக்கும் வர மாட்டாங்க போலிருக்கு", அப்பா ஏக்கத்தோடு புலம்பினார்.

"அப்ப இன்னைக்கும் பக்கத்து வீட்டு அம்மா சமைக்கிறததான் சாப்பிடனுமாப்பா?"

"ஏன்டா, அது உனக்குப் பிடிக்கலையா?"

"இல்லைப்பா.. நம்ப அய்யா வீட்டுது போல வராதுப்பா. பக்கத்து வீட்டு சாப்பாடு எனக்கு அடிக்கடி வயித்த கலக்குதுப்பா"

"சரிடா..இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்க..நாளைக்கு அய்யா வீட்டுக்காரங்க திரும்பி வந்துடுவாங்க"

மறுபடியும் வீட்டை நோக்கி அப்பாவொடு நடக்கலானேன். அப்பா இந்த முறை மௌனமானார்.

"அப்பா , ஏதாச்சும் பேசிக்கிட்டு வாப்பா, நான் வேணா கேள்வி கேட்டுகிட்டே.."

"என்னடா கேட்கப் போற?"

"எவ்வளவு நாளுப்பா நம்ப அய்யா வீட்டுலேயெ இருக்கப் போறோம்?.."

"ஏண்டா , உனக்கு எதாவது பிரச்சினையா?"

"முன்னடி ஒரு பிரச்சினையும் இல்லை.. இப்பத்தான் ஒரு வாரமா.."

"அய்யாவொட பேரப் பசங்க ஏதாச்சும் சண்டை போட்டாங்களா?"

"பெரிய பசங்க இல்லப்பா... அந்த குட்டியா ஒருத்தவன் இருக்கானே..அவந்தாம்பா என்னை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறான், நேத்து நான் அவன் பேச்ச கேட்கலன்னு என்னை கல்லால அடிச்சிட்டாம்பா.. கால்ல சரியான வலி..அப்ப உன்னை எல்லா இடத்துலேயும் தேடிப் பார்த்தேன். நீதான் எங்கயோ போயிட்டே என்கிட்ட சொல்லாமயே.."

"அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதடா.. அவன் ரொம்ப சின்னைப் பையன..அய்யாவொட கடைக்குட்டி பொண்ணோட பையன். அதான் வீட்டுல ரொம்ப செல்லம். லீவுக்கு தாத்தா வீடுக்கு வந்துருக்காக. இன்னும் கொஞ்ச நாலு தான். எல்லாரும் அவுங்க அவுங்க வீட்டுக்கு போயிடுவாங்க..அப்புறம் அய்யா, ஆச்சி, நீ, நான் அவ்வளவு பேரு தான்"

"சரிப்பா.."

பேசிக்கொண்டே தெரு முனைக்கு வந்துட்டோம். வழியில் யாரோ புதுசா ரெண்டு பெயர் கையில பெரிய குச்சி வச்சிகிட்டு இருந்தாங்க.. இவுங்கள நான் இந்த தெருவுல இதுக்கு முன்னடி பார்த்ததே இல்ல..

ரெண்டு அடி நானும் அப்பாவும் எடுத்து வைத்திருப்போம்..

அப்பா உறக்க கத்தினார்..

"ஓடிடு ..ஓடிடு.."

எந்தப் பக்கம் ஓடுறதுன்னே புரியல..அந்த ரெண்டு பேரும் எங்களை நோக்கி கொஞ்சம் வேகமா வந்துகிட்டு இருக்காங்க..

"ஓடு! ஓடு!..கதவைத் தாண்டி ஓடிடு.. நிக்காத!"

அப்பா இதுபோல அலறி அன்னைக்குத்தான் பாக்குறேன்.

எனக்கு கை காலு ஓடல.. அப்பா ஒரே தாவுல ஒரு பெரிய மரத்தட்டி போட்ட கதவை தாண்டிவிட்டார்.

என் பலம் முழுசையும் வைத்து ஒரே தாவல்.முடியல. கீழ வுழுந்திட்டேன்.

அதுக்குள்ள அந்த ரெண்டு பேருல ஒருத்தவன் வீசின குச்சியோட முனையிலருந்த இரும்பு கம்பி வளையம் என்னோட முகத்துல மாட்டி சுருக்கு போட்டது.

இன்னொருத்தவன் கட்டையால அடிக்கிறான்.. வலியில துடிக்கிறேன். கத்தி அப்பாவை கூப்பிடலாம்னு பார்த்தா வாயை தொறக்க முடியல..

என்னை அப்படியே தூக்கி பக்கத்துல இருந்த வண்டியில போட்டாங்க..

அங்கே என்னை மாதிரியே , என்னை விட பெரியவங்க எல்லாம் அழுதுகிட்டே..புலம்பிகிட்டே..

வண்டி அப்படியே நகர்ந்து அடுத்த தெருவுக்கு போகுது..

எட்டிப் பார்க்கிறேன்.

அப்பா மட்டும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவே இல்ல.

முதல் பதிவு

ரொம்ப நாள் ஆசை. ஒரு வழியாக வலை மூலம், என்னைக் கடந்து செல்லும் எல்லாவற்றையும் பகிர ஒரு இடம். பிள்ளையார் சுழியாக என்ன எழுதலாம்? 2006 -ஆம் ஆண்டு ஒரு காலைப்பொழுதில் எழுதி முடித்த "அப்பா" என்ற சிறுகதையோடு ஆரம்பிக்கிறேன்.