Saturday, November 8, 2014

அகவை 60 - கமல்




கலை ஞானியின் பிறந்தநாளான 2014 ஆண்டு நவம்பர் 7 - அவரது வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல். அறுபதாம் பிறந்தநாள். அதையொட்டி தொலைக்காட்சி ஊடகங்களில், பத்திரிக்கைகளில், இணையங்களில் நேர்காணல் என்ற பெயரில் கேட்கப்படும் பலதரப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் சோர்வே இல்லாமல் கருத்துமழை பொழிந்துகொண்டே இருக்கிறார். நாட்டை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்ட பிரபலங்களின் பட்டியலில் தென்னிந்தியாவிலிருந்து கமல் இடம்பெற்றிருந்தார். நற்பணி மன்றம் வழியாக பல வருடங்களாக தமிழகத்தில் எண்ணற்ற பல ரசிகர்களை ஒன்றிணைத்து பல நல்ல திட்டங்களை (சாக்கடைகளை சுத்தம் செய்தல், ரத்ததானம், பள்ளி சீருடை வழங்குதல், தையல் மெஷின், மூன்று சக்கர சைக்கிள் வழங்குவது) செயல்படுத்தி வந்த கமலுக்கு , கமல் ரசிகர்களுக்கு பிரதமரின் இந்த அறிவிப்பு ஒரு அங்கீகாரமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதையொட்டி இந்தப் பிறந்தநாளில் சென்னை மாதம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்யும் பணியை தமிழக அரசியல் தலைவர்கள் முன்னிலையில் கமல் தொடங்கிவைத்தார். பிறந்த நாளில் கேக் வெட்டுவது போல இந்தமுறை குப்பை வெட்டப் போகிறேன் எனவும் நகைச்சுவையாக அறிவித்திருந்தார். இதுபோலவே தமிழகத்தின் பல்வேறு ஏரிகளை சுத்தம் செய்யும் திட்டங்கள் நற்பணி மன்றத்திற்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார் கமல்.


எப்படி ஒரு கமலின் திரைப்படம் திருப்தியைக் கொடுக்குமோ அதுபோலவே ஊடகங்களுக்கு / பத்திரிக்கைகளுக்கு நேர்காணல் என்ற பெயரில் கமல் சொல்லும் கருத்துக் குவியல்களும். சினிமா மட்டுமல்லாது உலகின் எல்லாவற்றையும் அலசி ஆராயும் குணம் கமலுக்கு நிறையவே இருப்பதால் ஒவ்வொரு கருத்தும் தங்கு தடையின்றி வியக்கவைக்கும் உவமைகளோடு கொட்டிக்கொண்டே இருக்கும். எப்படி அவரது திரைப்படங்கள் நம்மை மீண்டும் மீண்டும் பார்க்கச் செய்வதுபோலவே ஊடகங்கள் வழி கமல் பகிரும் விஷயங்களும். இந்திய நாட்டில் இதுபோல ஒரு மனிதரை வேறு எங்கும் பார்க்க முடியாது என்பதை இதுபோன்ற ஒவ்வொரு வாய்ப்பிலும் நமக்கு உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்படி ஒரு வரிசையில் இந்த அறுபதாம் பிறந்த நாளை ஒட்டி ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கமல் சொன்ன சிலபல கருத்துக்களை இங்கே பதிக்கிறேன்.


1) தசாவதாரம் - 9 மாதங்களில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வேறு யாராவது தொட்டிருந்தால் 350 நாட்கள் வந்திருக்கும்.

2) தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்தி மழை பொழிகிறது பாடலை முப்பது நாள் எடுத்தோம். Cuts அதிகமாகத் தெரியும். ட்ராலி போய்கொண்டு இருக்கும்போதே லென்ஸ் மாறும். ஏக் துஜே கேலியே படத்தில் வட்டார மொழி வசனங்கள் ஒரே காட்சியில் 350 அடி படமாக்கப் பட்டது.

3) தன் படங்களில் சுனாமி, எபோலா போன்ற விஷயங்களை முன்கூட்டியே சொன்ன விஷய்ம் பற்றிய கேள்விக்கு "வரலாற்றோடு பூகோளத்தையும் சேர்த்து படித்தால் இதெல்லாம் யாருக்கும் தோணும்"

4) சுகாதாரம் பற்றி பேசுகையில்: கொசுக்களுக்கு ஆயுளா உங்களுக்கு ஆயுளா என நீங்கதான் முடிவு பண்ணனும்.

5) பிரிட்டிஷ் இம்பீரியலிசம் என்பதுபோல ஜப்பான் மீது தான் தயாரித்த இரு அணுகுண்டுகளை வீசியது அமெரிக்க இம்பீரியலிசம். அம்மை நோயை உலகம் முழுதும் அழித்துவிட்டப் பிறகு இன்னமும் ஏன் அந்தக் கிருமியை அமேரிக்கா பாதுகாத்து வருகிறது ஏன்? புது நவீன உரங்களை உணவுப் பொருள் மீது தெளித்து ஏன் அவற்றை விஷமாக்க வேண்டும்? இதைக் கேள்வி கேட்கவும் ஆள் கிடையாது. பதில் சொல்லவும் ஆள் கிடையாது.

6) பகுத்தறிவு: சாண்டா கிளாஸ் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்ல. மிக்கி மௌஸ் இருப்பதால் என்ன சவுகரியங்களோ அதேதான் அதற்கும். அந்த அளவுக்கு கடவுள் இருக்கும் பட்சத்தில் அது ஒரு பெரிய சந்தோஷமாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் ஒண்ணுமில்லை. ஆனா மிக்கி மௌசிடம் கேட்டுத்த்தான் சொல்லணும் உங்க பொண்ணுக்கு என் பையனை கொடுக்கலாமா இல்லையா என சொன்னால் என்னால் அதை தாங்கிக்க முடியாது. அதுதான் என்னோட பகுத்தறிவு போராட்டம். என்னுடைய உதாரணத்தில் மஹா விஷ்ணு = மிக்கி மௌஸ்.

7) ரிச்சர்டு டாககின்ஸிடம் ஏன் இஸ்லாத் பற்றி விமர்சனம் செய்யமாட்டுறிங்க எனக் கேட்கையில் எனக்கு பாதித்ததை மட்டுமே நான் முதலில் பேச முடியும்னு சொல்றார். எனக்கு கூவக் கட்டு இருந்தால் நான் எதற்கு டைபாய்டு மருந்து சாப்பிடனும்? அதுவரும்போது அதையும் பார்த்துப்பேன்.

8) பெரியார் இராமானுஜத்தின் தம்பி. இராமனுஜம் இயேசு கிறித்துவின் தம்பி. "கோவில் கொடியவர்களின் கூடாராமாக மாறிவிடக் கூடாது" என்ற கருத்து பைபிலேலேயே இருக்கு. "tent of thieves ". பராசக்தி பேசும் நாத்திக வசனமும் இயேசு பேசியதாகச் சொல்லப்படும் வசனமும் ஒன்றாகவே இருக்கிறது. பகுத்தறி என்பது எல்லா காலக் கட்டத்திலேயும் வந்துகொண்டே இருக்கு.

9) காதலிக்கிறேன் என சொல்லும்போது பெற்றொர்கள் "அது எந்த சாதிப் பொண்ணு /பையன்?" எனக் கேட்பது எவ்வளவு பெரிய பகுத்தறிவின்மை! காதல் மாதிரி ஒரு போதிமரம் கிடையவே கிடையாது. கல்யாணம் (திருமண வாழ்க்கை) பெற்றோர்களிடம் அதை மறக்கடிக்கச் செய்யும்.

10) அமெரிக்கா போன்ற வசதி இருக்கிற நாடுகளில்தான் அவரவர் வேலைகளை அவரவர்களே செய்துகொள்கிறார்கள். காலை ஐந்தரைலிருந்து ஆறுமணிக்குள் ராஜாஜி கிணத்தடியில் அவரது துணிகளை அவரே துவைத்துக் கொண்டிருப்பார்.

11) கேரளாவில் படங்கள் நல்லா இருப்பதன் காரணம் அங்கே ஃ பிலிம் சொசைட்டியின் இயக்கம் ரொம்ப வலுவாக இருக்கிறது. பெங்காலிக்கு அப்புறம் கேரளாதான்.

12) சினிமாவில் கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகளில் குதூகலம் அடஞ்சிரக் கூடாது. அப்படி அடஞ்சிருந்தா சத்யஜித்ரே கிடைத்திருக்க மாட்டார் நமக்கு. அவர் நேரா ஃ பிரான்ஸ் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டார். இங்க்லீஷ் கற்றுக்கொள்வதாக இருந்தால் எதற்கு மயிலாப்பூர் அய்யரிடம் கத்துக்கணும்? நேரா வெள்ளக்காரனிடமே கத்துக்கணும். இவர் சமஸ்கிருதம் மாதிரிதானே அதையும் பேசுவாரு!

13) மருதநாயகத்திற்காக நான் எழுதியதாக என் சொந்தக் கருத்தாக நினைத்துக் கொண்டிருந்த வரிகள் "எறும்பும் தன் கையால் எண் சாண்" - உண்மையில் அவ்வையார் எழுதியது.

14) 1975-ல் எனது இருபத்திரண்டு படங்கள் வெளியானது. மலையாளத்தில் 11, தமிழில் 12. ஒரே தீபாவளியில் இரு படங்கள் (சிகப்பு ரோஜாக்கள், மனிதர்களில் இத்தனை நிறங்களா? ) வெளியானது.

15) சபரிமலை ஸ்ரீஐயப்பன் படத்தில் காபரே டேன்ஸ் இருக்கும். பக்தி படம் என்பதால் அந்தப் படத்திற்கு விமர்சனம் செய்யவில்லை பத்திரிக்கைகள்.

16) எஸ்.பாலச்சந்தர், கே.பாலச்சந்தர், கமலஹாசன் போல எத்தனை படைப்பாளிகள் பாடல்களே இல்லாமல் படத்தை இயக்கி இருக்கிறார்கள் ? பெரிய இயக்குனர்கள் பெயர்களை எல்லாம் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment